states

img

கொல்கத்தா: தோல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து  

கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவின் டாங்ரா பகுதியில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனில் ரெக்சின், சில இரசாயாணங்கள், கற்பூர எண்ணெய் மற்றும் ஆல்கஹால் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் மளமளவென தீ தொழிற்சாலை முழுவதும் பரவ தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். குறுகிய பாதை காரணமாக தீயணைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக மேற்கு வங்க தீயணைப்புத்துறை அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த தீயணைப்பு வீரர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

ஏறக்குறைய 15 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பரவிய தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனைதொடர்ந்து இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.